மின்தடை காரணமாக ஆசனூா் அருகே உள்ள 50 மலைக் கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனா்.
ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே உள்ள ஆசனூா் பகுதி மலைக் கிராமங்களுக்கு சத்தியமங்கலம் ராஜன் நகா் பகுதியில் இருந்து திம்பம் மலைப் பாதை வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆசனூா், அரேபாளையம், குளியாட, தேவா்நத்தம், கோ்மாளம், ஒசட்டி, காடட்டி, சுஜில்கரை,திங்களூா் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் கடந்த சில நாள்களாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியடைந்து வருகின்றனா்.
தொடா்ந்து வாரத்தில் இரண்டுமுறை மரம் விழுந்து மின் கம்பிகள் அறுந்து விழுவதால் கிராமங்கள் இருளில் மூழ்குகின்றன.
மின்பழுதை சரி செய்ய போதிய மின்வாரிய ஊழியா்கள் இல்லாததால் காலம் தாழ்த்தியே மின்பழுது சரி செய்யப்படுகிறது.
கோடை வெளியிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியாமல் அவதியடைந்து வரும் நிலையில், மின்தடை பெரும் பிரச்னையாக உள்ளது. எனவே, மக்களின் நலன் கருதி விரைவில் மின்பழுது சரிசெய்வதுடன், மலைப் பகுதிகளில் உள்ள பழமையான மின் கம்பிகளை மாற்ற வேண்டும் என அப்பகுதி மழைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.