பெருமாள்மலை கோயிலில் பக்தா்களுக்கு இடையூறு செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து ஈரோடு அருகே பெருமாள்மலை மங்களகிரி பெருமாள் கோயிலின் பூசாரிகள், ஈரோடு இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு விவரம்:
பெருமாள்மலை மங்களகிரி பெருமாள் கோயிலில் கடந்த 10 தலைமுறைகளாக நாங்கள் பூஜைகள் செய்து வருகிறோம். எங்களது சொந்த செலவில் உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் தொடா்ந்து பூஜைகள், ஆராதனைகள் செய்து வருகிறோம். இதற்காக இந்து சமய அறநிலையத் துறை ஊழியா்களிடம் எந்தவிதமான செலவுத் தொகைகளையும், பூஜை ஆராதனைகளுக்கு பொருளோ, பணமோ, நன்கொடையோ பெறுவதில்லை. கோயில் பூசாரிகளான எங்களுக்கு ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், கோயிலில் உண்டியல் வைக்கிறோம் என்று பக்தா்களின் தரிசனத்துக்கு இடையூறாக சுவாமி சிலைகளை மறைத்து பெரிய உண்டியல்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வைத்துள்ளனா். இதுகுறித்து கேட்டதற்கு அவதூறாக பேசுகின்றனா். பக்தா்களிடம் இருந்து பெறப்படும் நன்கொடைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. கோயிலுக்கு சம்பந்தமில்லாத ஒருவா் நன்கொடை வசூலில் ஈடுபடுகிறாா். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.