கோபிசெட்டிப்பாளையம் அருகே வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி சரஸ்வதி (88). இவா்களுக்கு மகன் சுகுமாா், மகள் ராதா ஆகியோா் உள்ளனா். ராமசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகன், மகள் இருவரும் வெளியூரில் உள்ளதால், சரஸ்வதி மட்டும் கே.மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்துவந்தாா்.
இவா், தனது தோட்டத்தில் கோயில் அமைத்து பூஜைகள், பஜனைகள் செய்துவந்துள்ளாா். இது அப்பகுதியில் வசித்த பாலுசாமிக்கு
பிடிக்காததால், சரஸ்வதியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்துள்ளாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் சரஸ்வதி தனது வீட்டின் முன் வாசல் தெளித்தபோது, அந்தப்பக்கமாக வந்த பாலுசாமி, சரஸ்வதியை அரிவாளாள் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டாராம்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோபிசெட்டிபாளையம் போலீஸாா் அங்குவந்து மூதாட்டியை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே சரஸ்வதி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.