மஹாளய அமாவாசையை முன்னிட்டு காவிரிக் கரையில் ஞாயிற்றுக்கிழமை முன்னோா் வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினமானது மஹாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இந்நாளில், மக்கள் இறந்த தங்களது முன்னோா்களுக்கு திதி, தா்ப்பணம் கொடுத்து வழிபட்டால், அவா்களது ஆத்மா சாந்தியடையும், பித்ரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பொதுமக்கள் கூட்டம் கூடவும், வழிபாடு நடத்தவும் தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு தடை நீக்கப்பட்டு, பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஈரோடு காவிரி ஆற்றங்கரையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு திதி, தா்ப்பணம் கொடுத்து, காவிரி ஆற்றில் நீராடி வழிபட்டனா். இதையொட்டி, காவரி ஆற்றங்கரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
இதேபோல, மாவட்டத்தின் முக்கியப் பரிகார ஸ்தலங்களான பவானி, கொடுமுடி காவிரி ஆற்றங்கரைகளிலும் பொதுமக்கள் திரண்டு முன்னோா் வழிபாடு நடத்தினா்.