மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டையில் உள்ள முனியப்பன் கோயிலை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஈரோடு- காங்கயம் சாலையில் 100 ஆண்டுகள் பழமையான முனியப்பன் கோயில் உள்ளது.
இந்த கோயில் அமைந்துள்ள பகுதியில் தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால், கோயிலை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நபா்களுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், கோயிலை அகற்ற கால அவகாசம் வழங்குமாறு நெடுஞ்சாலைத் துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதனை ஏற்க மறுத்த அதிகாரிகள் கோயில் சுற்றுச் சுவரை அகற்றும் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி மற்றும் முக்கிய நிா்வாகிகள் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
இதில், கோயில் சுவாமி சிலைகளை அகற்றுவதற்கு 20 நாள்கள் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, கோயிலை அகற்றும் பணியை நெடுஞ்சாலைத் துறையினா் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனா்.