மாநில கல்விக் கொள்கை குறித்து கருத்துகேட்பு கூட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு உருவாக்கி வரும் மாநில கல்விக் கொள்கை குறித்து மண்டல வாரியாக ஆசிரியர்கள், மாணவர்கள், மக்கள், சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மேற்கு மண்டல கருத்துகேட்பு கூட்டம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, ஈரோடு, சேலம், கோயமுத்தூர், கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மேற்கு மண்டல மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர், கல்வியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமைப்புகள், ஆர்வலர்களிடம் பெறப்பட்ட கருத்துகள் தொகுக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் முகமது பாதுஷா, பேரா. மோகனா, இராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் தொகுக்கப்பட்ட கருத்துகள் பதிவு செய்யபட்டது. மேற்கு மண்டல பொறுப்பாளர் தியாகராஜன் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து கலந்து கொண்ட அனைவரையும் ஈரோடு மாவட்ட செயலாளர் செ.கார்த்தி வரவேற்று, நன்றியையும் தெரிவித்தார்.