மஹாளய அமாவாசையை முன்னிட்டு காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஏராளமான பக்தர்கள் தங்களுடன் வாழ்ந்த மறைந்த மூதாதையருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
தமிழ் மாதங்களில் புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படுகிறது. இந்நாளில், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தும், பிண்டம் வைத்தும் வழிபாடுகள் நடத்தினால் அவர்களின் ஆன்மா அமைதி பெறும், வாழ்வில் நன்மைகள் பிறக்கும் என்பதும் நம்பிக்கை.
புரட்டாசி மாத அமாவாசையான ஞாயிற்றுக்கிழமை பவானி, காவிரி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் முத்தோர் வழிபாட்டுக்கு திரளான பக்தர்கள் வந்தனர். பரிகார மண்டபங்கள் மட்டுமின்றி பிற பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பரிகார கூடங்களிலும் பக்தர்கள் மூதாதையர் வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும், பல்வேறு தோஷ நிவர்த்தி பூஜைகளும் நடத்தப்பட்டன.
தொடர்ந்து, காவிரியில் புனித நீராடி சங்கமேஸ்வரரை வழிபட்டனர். பக்தர்கள் ஏராளமான வாகனங்களில் வந்திருந்ததால் கூடுதுறை வளாகத்தில் வாகனம் நிறுத்துமிடம் நிரம்பி சாலையோரங்களிலும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. இதனால், போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காவிரியில் தண்ணீர் அதிகளவில் ஓடுவதால் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்கும் வகையில் தீயணைப்பு படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
கரோனா பரவல் தடையால் கடந்த இரு ஆண்டுகளாக பவானி கூடுதுறை புரட்டாசி மஹாளய அமாவாசை தினத்தில் மூடப்பட்டதோடு நதிக்கரையோரங்கள் பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு இயல்புநிலை திரும்பி உள்ளதால் எவ்வித தடையும் இன்றி பக்தர்கள் வழிபாடடு நடத்தினர்.