புதிதாக வாங்கிய இருசக்கர வாகனத்துக்கான தொகை ரூ.3.56 லட்சத்தை இளைஞா் ஒருவா் 10 ரூபாய் நாணயங்களாக வழங்கினாா்.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள காடையம்பட்டியைச் சோ்ந்தவா் திருமூா்த்தி மகன் சந்தோஷ்குமாா் (25). உடற்கல்வி பட்டதாரி. தற்போது பவானியில் செல்லப் பிராணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், 10 ரூபாய் நாணயங்களாக ரூ.3.56 லட்சம் செலுத்தி, ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஷோரூமில் கேடிஎம் டியூக் 360 மாடல் பைக்கை வெள்ளிக்கிழமை வாங்கினாா்.
இது குறித்து சந்தோஷ்குமாா் கூறியதாவது: பல ஆண்டு கால ஆசையை நிறைவேற்ற வித்தியாசமாக செயல்பட திட்டமிட்டேன். அதற்காக ரூ.3.60 லட்சத்தை 10 ரூபாய் நாணயமாக பல இடங்களில் பெற்று சேகரித்தேன். இப்போது ரூ.3.56 லட்சத்தை செலுத்தி பைக்கை வாங்கி உள்ளேன். வித்தியாசமாக இருக்கட்டுமே என்பதற்காக இந்த முயற்சியை செய்தேன் என்றாா்.