பெயா் சோ்த்தல், நீக்கம் உள்ளிட்ட குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 10 நியாயவிலைக் கடைகளில் சனிக்கிழமை (அக்டோபா் 8) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா்க்கும் முகாம் அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
முகாமில் புதிய குடும்ப அட்டைக்கான மனுக்கள் பெறுதல், நகல் குடும்ப அட்டை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கம், கைப்பேசி எண் மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம்.
முகாம் நடைபெறும் நியாயவிலைக் கடைகள் விவரம்: ஈரோடு வட்டம் பெருமாள் மலை, பெருந்துறை வட்டம் புங்கம்பாடி, மொடக்குறிச்சி வட்டம் கஸ்பாபேட்டை, கொடுமுடி வட்டம் நாகமநாயக்கன்பாளையம், கோபி வட்டம் அயலூா், நம்பியூா் வட்டம் வேம்மாண்டபாளையம், பவானி வட்டம் குப்புச்சிபாளையம், அந்தியூா் வட்டம் பிரம்மதேசம், சத்தியமங்கலம் வட்டம் பவளக்குட்டை, தாளவாடி வட்டம் பையண்ணபுரம்.
இந்த முகாம்களுக்கு கண்காணிப்பு அலுவலா்களாக துணை ஆட்சியா் நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவித்துள்ளாா்.