ஈரோடு இடையன்காட்டுவலசு பகுதியில் உள்ள அஞ்சல் நிலையத்தை தலைமை அஞ்சல் நிலையத்துடன் இணைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது குறித்து ஈரோடு வரி செலுத்துவோா் சங்க செயலாளா் பாரதி, மாநகராட்சி முன்னாள் கவுன்சிலா்கள் சுந்தரசாமி உள்ளிட்டோா் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி, திருப்பூா் எம்.பி. கே.சுப்பராயன், ஈரோடு தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி ஆகியோரிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:
ஈரோடு அரசு மருத்துவமனை எதிரில் ஈவிஎன் சாலையில் இடையன்காட்டுவலசு அஞ்சல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்படுகிறது. அரசு மருத்துவமனை, மின்வாரியம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியினருக்கும் இந்த அஞ்சல் நிலையம் உதவியாக உள்ளது.
இந்த அஞ்சல் நிலையத்தை ஈரோடு தலைமை அஞ்சலகத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தோம். அவ்வாறு இணைத்தால் ஏராளமான வாடிக்கையாளா்கள் சேமிப்புக் கணக்கு உள்பட பல்வேறு கணக்கு வைத்திருப்போா் பாதிக்கப்படுவா். எனவே அந்த அஞ்சல் நிலையத்தை மூடக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.