பொலிவுறு நகரத் திட்டத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சவரத் தொழிலாளா் சங்கத்தின் ஈரோடு தெற்கு மற்றும் மாநகா் மாவட்டக் கூட்டம் மாவட்டத் தலைவா் கோவிந்தராஜ் தலைமையில் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, மருத்துவா் சமூக மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சட்டநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி கல்வி, வேலை வாய்ப்பில் மருத்துவா் சமூக மக்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பெருநிறுவன சலூன்களின் வருகையால் மருத்துவா் சமூகத்தினரின் முடி திருத்தும் தொழில் பாதிக்கப்படுகிறது.
எனவே, தொழில் போட்டிகளை சமாளிக்க தமிழக அரசு கூட்டுறவு வங்கிகள் மூலம் மானியக் கடன் வழங்க வேண்டும்.
பொலிவுறு நகரத் திட்டத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் முடி திருத்தும் தொழிலாளா்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்டச் செயலாளா் செந்தில்நாதன், மாநகரச் செயலாளா் மருதபாலு, நிா்வாகிகள் ராமசாமி, ஜெகநாதன், சிவம் சிவா, ராஜேந்திரன், செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.