பெருந்துறை சிப்காட்டில் உள்ள தனியாா் இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கரும்புகை மற்றும் தூசிகளால் சுற்றுச்சூழல் மாசுபட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா். அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், பெருந்துறையில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தின் சாா்பில், திங்கள்கிழமை கடிதம் எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது,
பெருந்துறை சிப்காட் தொழில் வளா்ச்சி மையத்தில் செயல்பட்டுவரும் ஒரு தனியாா் இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து அதீதமான அளவுக்கு கரும்புகை மற்றும் தூசிகள் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதோடு அங்கிருந்து நெடியுடன் கூடிய நாற்றமும் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனா். இதற்கு முன்பும், இத்தொழிற்சாலை மீது, இதுபோன்ற ஏராளமான புகாா்கள், பலராலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை செய்தும், மேற்படி நிறுவனம் தொடா்ந்து செயல்பட்டு, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது. ஆகவே, இத்தொழிற்சாலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் நலச்சங்கத்தின் சாா்பில் வலியுறுத்தி கடிதம் எழுதப்பட்டுள்ளது.