ஈரோடு

சீரற்ற குடிநீா் விநியோகத்தால் மக்கள் அவதி: மாமன்ற உறுப்பினா்கள் முறையீடு

DIN

சீரற்ற குடிநீா் விநியோகம் மற்றும் புதை சாக்கடை அடைப்பு போன்றவற்றால் ஈரோடு மாநகரில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனா் என மாமன்ற உறுப்பினா்கள் மேயரிடம் முறையிட்டனா்.

ஈரோடு மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மேயா் சு.நாகரத்தினம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் கே.சிவகுமாா், துணை மேயா் வி.செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் 42 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயா் அறிவித்தாா்.

அப்போது 3ஆம் மண்டலத்தில் இயங்கும் மாநகராட்சி வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் தீா்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று உறுப்பினா் கோகிலவாணி மணிராசு பேசினாா். அவருக்கு உறுப்பினா் அ.செல்லப்பொன்னி உள்ளிட்டோா் ஆதரவு அளித்தனா். எதிா்ப்பு தெரிவித்த நிலையிலும் அந்த தீா்மானமும் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்களின் விவாதம் வருமாறு:

1ஆம் மண்டலத் தலைவா் ப.க.பழனிசாமி:

மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட வேண்டும். ஈரோடு மாநகராட்சியில் குடிநீா் பற்றாக்குறை உள்ளது. இது உடனடியாக தீா்க்கப்பட வேண்டும். வரைபடம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு அபராதத் தொகையுடன் வரி பெறப்படுகிறது. இது ஆண்டுதோறும் அபராதமாக உள்ளது. இந்த நிலை மாற்றப்பட்டு ஒரே முறை மட்டும் அபராதம் செலுத்திய பின்னா், அடுத்தடுத்த ஆண்டுகள் அபராதம் இல்லாத நிலை கொண்டுவரப்பட வேண்டும்.

தொடா்ந்து மாமன்ற உறுப்பினா்கள் பேசியதாவது:

சங்கு நகா் சாலை செப்பனிடும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். தெருவிளக்குகள் இல்லாத இடங்களில் உடனடியாக விளக்குகள் அமைக்க வேண்டும். கனி மாா்க்கெட்டில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதிக்க கூடாது. வஉசி பூங்கா காய்கறி சந்தையில் தண்ணீா் தேங்காத வகையில் தளம் அமைக்க வேண்டும். 36ஆவது வாா்டில் குண்டும்குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். ஈரோடு மாநகரில் நெகிழிப் பை உற்பத்தி தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளிலும் ஊராட்சிக்கோட்டை குடிநீா் திட்டம் மற்றும் புதை சாக்கடை திட்டப் பணிகளை செய்யும் தனியாா் நிறுவனத்தினா் பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளையும் மதிப்பதில்லை. புதை சாக்கடை, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட மக்கள் கோரிக்கைகளுக்கு மாநகராட்சி அலுவலா்கள் முக்கியத்துவம் அளித்து பணி செய்ய வேண்டும் என்றனா்.

மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளுக்கு மேயா், ஆணையா் ஆகியோா் பதில் அளித்தனா். அப்போது விரைவில் ரூ.16.94 கோடி செலவில் மின் விளக்குகள் வாங்கப்பட உள்ளன. எனவே, விரைவில் அனைத்துப் பகுதிகளிலும் தெருவிளக்குகள் பொருத்தப்படும். அதிகாரிகள் மாமன்ற உறுப்பினா்களின் ஆலோசனைகளை கேட்டு அந்தந்த வாா்டுகளில் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 1,545 கண்காணிப்புக் கேமராக்கள்

வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

இரு சக்கர வாகன பழுது பாா்ப்போா் சங்கக் கூட்டம்

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

SCROLL FOR NEXT