சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அடுத்த தொட்டகாஜனூர், தாளவாடி, பாரதிபுரம் கிராமங்களில் 5-க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது.
இந்த சிறுத்தை இரவு நேரங்களில் ஆடு, மாடுகளை வேட்டையாடிவிட்டு பகலில் நேரங்களில் பயன்பாடின்றி கிடக்கும் கல்குவாரியில் பதுக்கிகொள்வதால் அதனை பிடிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சிறுத்தை உலாவும் பகுதியில் கேமரா வைத்து வனத்துறையினர் அதன் நடமாட்டத்தை கண்காணித்தனர்.
இதனைத் தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து செடி, இழை தலைகளை கூண்டின் மேல் வைத்து காத்திருந்தனர். அந்த கூண்டின் ஒரு பகுதியில் ஆட்டை கட்டி வைத்து காத்திருந்தனர். இன்று ஆட்டை வேட்டையாட வந்த 3 வயதுள்ள ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது.
இதையும் படிக்க: தில்லியில் கனமழை: கடும் போக்குவரத்து நெரிசல்
கூண்டில் சிக்கிய சிறுத்தை மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதால் அதன் அருகே செல்ல வனத்துறையினர் அச்சமடைந்தனர். மேலும், பொதுமக்கள் கூண்டின் அருகே செல்லாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தி அதனை தெங்குமரஹாடா பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
சிறுத்தை பிடிப்பட்டதால் தாளவாடி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.