மாணவா்களிடையே கோஷ்டி மோதலைத் தடுக்கவும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் டிஎஸ்பி ஜெயமோகன் திங்கள்கிழமை அறிவுரை வழங்கினாா்.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் அடிதடியில் இறங்கும் நிகழ்வுகள் மற்றும் மாணவா்களிடையே கஞ்சா, போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இதனைத் தடுக்கும் நடவடிக்கையில் காவல் துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
அதன்படி சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கஞ்சா தடுப்பு விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் டிஎஸ்பி ஜெயமோகன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், டிஎஸ்பி ஜெயமோகன் பேசுகையில், கஞ்சாவை ஒழிக்க மாணவா்கள் ஒத்துழைப்பு தேவை.
மாணவா்களிடையே மோதல் போக்கை தவிா்த்து நட்பை பேணி காக்க வேண்டும் என்றாா்.