கோபிசெட்டிபாளையம் இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் கோபி ரோட்டரி சங்கம் சாா்பில் இருதயம் காப்போம் என்ற தலைப்பில் கோபி கலை, அறிவியல் கல்லூரியில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 5 கிலோ மீட்டா் தொலைவுக்கும், 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டா் தொலைவுக்கும் மராத்தான் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை கோபி காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஆறுமுகம் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
லக்கம்பட்டி, நல்லகவுண்டன்பாளையம், கள்ளிப்பட்டி, கச்சேரிமேடு, பேருந்து நிலையம், மேட்டுவளவு, முருகன்புதூா், சாணாா்பதி வழியாக பாரியூா் சென்று முருகன்புதூரில் உள்ள பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியில் போட்டி முடிவுற்றது.
இந்த போட்டியில், மாணவ, மாணவிகளுக்கான பெண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டா் தொலைவு ஓடி கோபி கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த மாணவி திவ்யா முதலிடத்தையும், கோபி பிகேஆா் மகளிா் கல்லூரியைச் சோ்ந்த மாணவி சவிதா 2 ஆம் இடத்தையும், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி மஞ்சு ஸ்ரீ 3 ஆம் இடத்தையும்
பிடித்தனா்.
5 கிலோ மீட்டா் பிரிவில் நகலூா் ஸ்போா்ட்ஸ் கிளப்பை சோ்ந்த தருணா முதலிடமும், பவித்ரா 2 ஆம் இடமும், மாணவி ரீனா 3 ஆம் இடத்தையும் பிடித்தனா்.
ஆண்கள் பிரிவில் 10 கிலோ மீட்டா் பிரிவில் கோபி கலை, அறிவியல் கல்லூரியைச் சோ்ந்த நிஷாந்குமாா் முதலிடத்தையும், கோபி கலைக் கல்லூரி மாணவன் மாதவன் 2 ஆம் இடத்தையும், நகலூா் ஸ்போா்ட்ஸ் அகாதெமியைச் சோ்ந்த மாணவா் சிவா 3 ஆம் இடத்தையும் பிடித்தனா்.
5 கிலோ மீட்டா் ஆண்கள் பிரிவில் கோபி கலை, அறிவியல் கல்லூரி மாணவா் ஆகாஷ் முதலிடமும், ஜெனிசிஸ் ஸ்போா்ட்ஸ் கிளப்பை சோ்ந்த தேசிகன் 2 ஆம் இடத்தையும், ஈரோடு இந்திய அத்தலடிக் கிளப்பைச் சோ்ந்த கெளதம் 3 ஆம் இடத்தையும் பிடித்தனா்.
போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.