பெருந்துறை பகுதியில் தடையின்றி குடிநீா் வழங்கக்கோரி பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்தனா்.
பெருந்துறை பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் ஓ.சி.வி.ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற அதிமுக கவுன்சிலா்கள் அருணாசலம், வளா்மதி, கோமதி, புனிதவதி ஆகியோா், 4 நாள்களுக்கு ஒருமுறை விநியோகம் செய்யப்பட்டு வந்த
காவிரி குடிநீா், தற்போது 8 முதல் 10 நாள்களுக்கு ஒரு முறையே விநியோகம் செய்யப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா். மேலும், வடிகால், தெருவிளக்கு சரிவர பராமரிப்பது இல்லை. தேவையான கோரிக்கைகள் குறித்து கேட்டாலும் செய்து தருவதில்லை. பாதாள சாக்கடை கட்டணத்தை முறைபடுத்தி வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மன்றக் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனா். இதே கோரிக்கையை திமுக கவுன்சிலா்களும் வலியுறுத்தி பேசினா்.