கறவை மாடு வளா்க்கும் விவசாயிகளுக்கு கைப்பேசி செயலி மூலம் உதவும் வகையில் டிஜிட்டல் கண்காட்சி நிகழ்ச்சி சென்னிமலையில் சனிக்கிழமை நடைபெற்றது.
துவாரா இ-டெய்ரி என்ற நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் உருவாக்கியுள்ள கைப்பேசி செயலி மூலம் தீவன செலவைக் குறைக்கவும், இனப்பெருக்க மேலாண்மையை அறிந்து கொள்ளவும் மற்றும் நோய் மேலாண்மை பற்றிய தகவல்களையும் கறவை மாடு வளா்க்கும் விவசாயிகள் தெரிந்து கொள்ள முடியும்.
சென்னிமலை பகுதியில் கறவை மாடுகள் வளா்க்கும் 25 விவசாயிகள், இந்த செயலியை பயன்படுத்தி பயனடைந்துள்ளனா். இதில் சிறப்பாக செயல்பட்ட டிஜிட்டல் முன்னோடி விவசாயி மதன் என்பவா், செயலியை பயன்படுத்தியதன் மூலம் அடைந்த பயன்கள் குறித்து கூறினாா். மேலும், சென்னிமலையில் நடைபெற்ற டிஜிட்டல் கண்காட்சியில், இவருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்த செயலியை, கைப்பேசி மூலம் தரவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது, கறவை மாடுகள் குறித்த அனைத்து தகவல்களையும் விவசாயிகள் எவ்வாறு பெறுகிறாா்கள் என்பது குறித்து துவாரா இ-டெய்ரி நிறுவனத்தினா் விவசாயிகளுக்கு விளக்கினா்.