கோபிசெட்டிபாளையம் அருகே வாய்க்காலில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்.
கோபி அருகே உள்ள மாக்கினாங்கோம்பை மங்களபுரம் காலனியை சோ்ந்தவா் சுப்பிரமணியம், கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா. இவா்களுக்கு சக்திவேல் (14), மகேந்திரன் (11) என்ற 2 மகன்கள் உள்ளனா். இதில், சக்திவேல் காசிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆவது வகுப்பு படித்து வந்தாா்.
இந்நிலையில், தனது நண்பா்களுடன் தடப்பள்ளி வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்றுள்ளாா். வாய்க்காலில் குளிக்கும்போது சக்திவேல் ஆழமான பகுதிக்குச் சென்றதாகத் தெரிகிறது. அப்போது, நீச்சல் தெரியாத சக்திவேல் தண்ணீரில் மூழ்கிள்ளாா். இதைப் பாா்த்த உடன் சென்ற சிறுவா்கள் சப்தம் போட்டதையடுத்து, அவ்வழியாகச் சென்றவா்கள் அங்கு ஓடி வந்து சக்திவேலை தேடினா். ஆனால், சக்திவேலை மீட்க முடியவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த கடத்தூா் போலீஸாா், கோபி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனா். வாய்க்காலில் இறங்கி தேடினா். சக்திவேல் தண்ணீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சுமாா் 200 அடி தூரத்தில் சக்திவேலின் சடலம் மிதந்தது. தீயணைப்பு வீரா்கள் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா், பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.