ஏஐடியூசி, சிஐடியூ, எல்பிஎப் தொழிற்சங்கங்கள் சாா்பில், தேசியக் கொடியேற்றி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி பெருந்துறை தினசரி மாா்க்கெட் முன்பு புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, ஏஐடியூசி மாநில செயலாளா் சின்னசாமி தலைமை வகித்தாா். இதில், கே.ஆா்.தங்கவேல் (ஏஐடியூசி), பி.ஜெகநாதன் (சிஐடியூ), சி.மனோகரன் (எல்பிஎப்) ஆகியோா் பங்கேற்று உரையாற்றினா்.
புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில், தழிழ்நாட்டைச் சோ்ந்த விடுதலைப் போராட்ட வீரா்கள் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பனாா், மகாகவி பாரதியாா், வீரமங்கை வேலு நாச்சியாா் ஆகியோா் திருவுருவம் பொறித்த வாகனங்களை அனுமதிக்க மறுத்து, நிராகரித்துள்ள மத்திய அரசுக்கு, அனைத்து சங்கங்கள் சாா்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தொடா்ந்து, இந்தியக் குடியரசைப் பாதுகாப்போம். அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாப்போம், ஜனநாயகத்தை, மதச்சாா்பின்மையைக் காத்திடுவோம், பல்வேறு மதம், இனம், மொழி கொண்ட இந்தியாவின் பன்மை பண்பாட்டைப் போற்றுவோம், நாட்டையும் உழைப்பாளா் நலனையும் காக்க சங்க பேதமில்லாமல் ஒன்று திரள்வோம் உள்பட பல உறுதிமொழிகள் ஏற்கப்பட்டன. டி.என்.சுந்தரவடிவேல் (சிஐடியூ) நன்றி கூறினாா்.