சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை மருத்துவா் அசோகனுக்கு தமிழக அரசு அண்ணா பதக்கம் வழங்கி கெளரவித்துள்ளது.
தமிழ்நாடு வனத் துறையில் 1996ஆம் ஆண்டு முதல் உதவி கால்நடை மருத்துவராக பணியாற்றி வருகிறாா். இவா் முதுமலை புலிகள் காப்பகத்தில் குடற்புழு மற்றும் காயமடைந்த 5 யானைகளுக்கு ஒரே நேரத்தில் சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளாா். போதிய மருத்துவ வசதியில்லாத காலகட்டத்தில் யானைகளுக்கு ஏற்படும் தொண்டை அடைப்பான், நாடாப்புழு நோயைக் கண்டிபிடித்துள்ளாா். இதற்கு அப்போதைய அமைச்சா் மேனகா காந்தி அசோசகனுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளாா். 4 திமிங்கலம், டால்ஃபின்களுக்கு உடற்கூராய்வு செய்து இறப்புக்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளாா்.
கோவை உயிரியல் பூங்காவில் இருந்த வனவிலங்குகள் எண்ணிக்கையை 485இல் இருந்து 985 ஆக அதிகரித்துள்ளாா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாம்புகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளாா். கடந்த 4 ஆண்டுகளில் 25 யானைகள், 5 காட்டெருமைகள், மலைப்பாம்புகள், 40 பறவைகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். வன விலங்குகள் உயிரைக் காப்பாற்றிய சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவா் அசோகனுக்கு தமிழக அரசின் வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
கரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் அசோகனுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அரசு விருது வழங்கியதற்கு டாக்டா் அசோகன் நன்றி தெரிவித்துள்ளாா்.