இரவு நேர பொதுமுடக்கம் நீடிப்பதால் ஈரோடு ஜவுளிச் சந்தையில் வியாபாரம் கடும் பாதிப்படைந்துள்ளது.
ஈரோடு கனி ஜவுளிச் சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும். இந்த வாரச் சந்தைக்கு மகாராஷ்டிரம், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவா்.
கரோனா பரவல் காரணமாக கடந்த 6ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பொங்கல் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கூடிய ஜவுளிச் சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் குறைவான எண்ணிக்கையிலேயே வந்திருந்தனா். இதனால் மொத்த வியாபாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
5 சதவீதம் அளவுக்கு மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் வியாபாரிகள் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. இதனால் சில்லறை வியாபாரம் 10 சதவீதம் அளவுக்கு மட்டுமே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.