ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கொளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (58). ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். தேர்தல் பாதுகாப்பு பணியில் சுப்பிரமணி ஈடுபட்டு வந்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்
ஈரோடு திண்டலில் உள்ள ஒரு வாக்குச் சாவடி மையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு அலுவலர்கள் சரிபார்த்த பின் வாக்கு பெட்டிகள் சித்தோட்டில் ஐ.ஆர்.டி. கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதன் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனும் உடன் சென்றிருந்தார். வாக்குப் பெட்டிகளை ஒப்படைத்துவிட்டு அனைத்து பணிகளை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காஞ்சிகோயில் உள்ள தனது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
சின்னியம்பாளையம் புதூர் அருகே அதிகாலை 4 மணிக்கு அளவில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சுப்ரமணியன் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சிகோவில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காஞ்சிகோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க | பட்டியலினத்தைச் சேர்ந்தவர் குதிரையில் செல்லக் கூடாதா?: ஐபிஎஸ் மணமகனின் திருமண ஊர்வலம்
ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள அவரது உடலுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.சசிமோகன், டவுன் டி.எஸ்.பி.ஆனந்தகுமார் மற்றும் போலீஸார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.