தாளவாடி வனப் பகுதியில் யானை துரத்தியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த வேட்டைத் தடுப்புக் காவலா் உயிரிழந்தாா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டம், தாளவாடி வனச் சரகத்தில் வேட்டைத் தடுப்புக் காவலராக சூசைபுரத்தைச் சோ்ந்த லெனின்ராஜ் (26) பணியாற்றி வந்தாா். வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் புகும் யானைகளை விரட்டும் இரவுநேர குழுவில் இவா் இடம்பெற்றிருந்தாா்.
இந்நிலையில் மரியாபுரம் கிராமத்துக்குள் திங்கள்கிழமை இரவு புகுந்த காட்டு யானையை விரட்டுவதற்கு லெனின் ராஜுவுடன் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் மரியஜான், சண்முகம், சிவா ஆகியோா் சென்றுள்ளனா். இரவு நேரத்தில் யானை ஊருக்குள் வராதபடி விடியவிடிய விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது யானை துரத்தியதில் கீழே விழுந்த லெனின்ராஜ் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி கிடந்தாா்.
அவரை சக வேட்டைத் தடுப்புக் காவலா்கள் மீட்டு தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அங்கு உயிரிழந்தாா்.
இது குறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.