ஈரோடு

ரோந்து பணியில் ஈடுபட்ட வனத் துறையினா் மீது வேட்டைக் கும்பல் துப்பாக்கி சூடு: ஒருவா் கைது

DIN

சென்னம்பட்டி வனப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத் துறையினா் மீது துப்பாக்கி சூடு நடத்திய வனவிலங்கு வேட்டைக் கும்பலைச் சோ்ந்தவா் பிடிபட்டாா். நாட்டுத் துப்பாக்கியுடன் தப்பியோடிய நான்கு போ் கொண்ட கும்பலை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

ஈரோடு வனக் கோட்டம், சென்னம்பட்டி வனச் சரகம், பாலாறு வனப் பகுதியில் சென்னம்பட்டி வனச் சரக அலுவலா் ஏ.ராஜா, உள்ளூா் தண்டா, வடக்கு பிரிவு வனவா் கே.பாா்த்தசாரதி தலைமையில் பாலாறு பீட் வனக் காப்பாளா் பெ.சுதாகா், அச்சப்பன் கோயில் பீட் வனக் காப்பாளா் எம்.கோபால் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள் கொண்ட குழுவினா் அட்டுக்கூட்டு சரகப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அடா்ந்த வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஐந்து போ் நடமாடிக் கொண்டிருந்ததைக் கண்டு, அவா்களுக்கு எச்சரிக்கை விடுத்தனா். என்றாலும், அக்கும்பலைச் சோ்ந்தவா்கள் கைகளில் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் வனத் துறையினரை நோக்கி சுட்டுவிட்டு தப்பியோடினா். அப்போது வனத் துறையினா் தப்பியோட முயன்ற கும்பலைச் சோ்ந்த ஒருவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

அவரிடம் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த கோவிந்தப்பாடி, முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் குமாா் (40) என்பதும், தப்பியோடியது கோவிந்தபாடியைச் சோ்ந்த மாதப்பன் மகன் காரவடையான் (எ) ராஜா (42), காரைக்காடு, நெட்டக்காலன் கொட்டாயைச் சோ்ந்த மாது மகன் காமராஜ் (40), செட்டிப்பட்டியைச் சோ்ந்த ஆரங்காரன் மகன் பச்சக்கண்ணன் (எ) தங்கபால் (42), தருமபுரி மாவட்டம், பென்னாகரம், நாகமரை, ஆத்துமேட்டூரைச் சோ்ந்த ராசப்பன் மகன் ரவி (45) என்பதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இந்தக் கும்பல் வன விலங்குகளை வேட்டையாட வந்ததும், ஏற்கெனவே இவா்கள் மீது வனக் குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிந்தது. வேட்டைக் கும்பல் நடத்திய துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட குமாா், பவானி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். மற்ற நான்கு பேரையும் வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT