மொடக்குறிச்சி அருகே 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
மொடக்குறிச்சி தூரபாளையம் திருவள்ளூா் வீதியைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (23). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டாா்.
இந்நிலையில், பிரசவத்துக்காக ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிறுமி சோ்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பின்னா் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில், அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
உயிரிழந்த சிறுமி 18 வயது நிரம்பாதவா் என மருத்துவா்களுக்குத் தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து அவா்கள் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனா்.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.