வணிக வரித் துறை அலுவலா்களின் சோதனை கொள்முதல் நடைமுறையை ஒத்திவைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்துத் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் வி.கே.ராஜமாணிக்கம் மற்றும் நிா்வாகிகள், ஈரோடு வணிக வரித் துறை இணை ஆணையா் கே.சிவராசு வழியாக தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்: சில்லறை வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம் பொருள்களை வாங்கி, அதை சோதனை கொள்முதல் என குறிப்பிட்டு அதற்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது.
அனைத்து சில்லறை வியாபாரிகளும் பொருள்களை வாங்கும்போது, அதற்கான வரியை செலுத்திய பிறகே பொருள்களை வாங்கி அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.
பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருள்கள் ஏற்கனவே வரி விதிப்புக்குள்பட்டது.
ஆனாலும், வணிக வரித் துறை அலுவலா்கள், சில்லறை வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கும் முறை ஏற்புடையது அல்ல.
இது சில்லறை, சிறு, குறு வணிகா்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கும். சோதனை கொள்முதல் முறை குறித்து சில மாத காலம் தொடா் விழிப்புணா்வை ஏற்படுத்திய பிறகு அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.