ஈரோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருந்தாளுநா்கள் கோரிக்கை அட்டை அணிந்து வியாழக்கிழமை பணியாற்றினா்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநா் பணியிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கும்மேலாக நிரப்பப்படவில்லை. தற்போது காலியாக உள்ள 1,300க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அனைத்து மருந்தாளுநா்களுக்கும் கரோனா ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
காலியாக உள்ள பதவி உயா்வு பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்தாளுநா்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். 10 ஆண்டுகளுக்கும்மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மருந்தாளுநா்களுக்கு சிறப்புத் தோ்வு மூலம் நிரந்தரப் பணியாளா்களாக்க வேண்டும்.
கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பின் பணியாற்றி வரும் மருந்தாளுநா்களின் பணி மூப்பு பட்டியலை வெளியிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு மருத்தாளுநா்கள் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், அனைத்து மருந்தாளுநா்களும் கோரிக்கை அட்டை அணிந்து வியாழக்கிழமை பணியாற்றினா்.
இது குறித்து அச்சங்க மாநிலச் செயலாளா் துரைசாமி கூறியதாவது: எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை முதல் வரும் 8 ஆம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்ற உள்ளோம். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் டிசம்பா் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது என்றாா்.