மொடக்குறிச்சி பாண்டீஸ்வரா் மற்றும் அண்ணமாா் சுவாமி கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் புதன்கிழமை ஏலம்விடப்பட்டன.
மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு கிராமத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான பாண்டீஸ்வரா் மற்றும் அண்ணமாா் சுவாமி கோயில்கள் உள்ளன.
இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை சுமாா் 50 ஆண்டுகளுக்கும்மேலாக தனியாா் பயன்படுத்தி வந்தனா். இது குறித்து பல்வேறு வழக்குகள் நடைபெற்ற நிலையில் நிலங்கள் கடந்த 15 ஆம் தேதி போலீஸ் பாதுகாப்புடன் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் புதன்கிழமை ஏலம்விடப்பட்டன.
இதில், பாண்டீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான 23.05 ஏக்கா் நிலம் 6 மாத பயன்பாட்டுக்கு ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்துக்கும், அண்ணமாா் சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 3.30 ஏக்கா் நிலம் 6 மாத பயன்பாட்டுக்கு ரூ.7ஆயிரத்து 700க்கு ஏலம்போனது.
இதில், இந்து அறநிலையத் துறை ஆய்வாளா் தேன்மொழி, கோயில் செயல் அலுவலா் வ.கீதா, குலவிளக்கு ஊராட்சி மன்றத் தலைவா் லோகநாயகி, ஒன்றியக் கவுன்சிலா் என்.ஆா். நடராஜ், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.