அரசு அறிவித்த ஊதியத்தை ஒப்பந்த நிறுவனம் தரமறுப்பதாகக் கூறி ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியா்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் தனியாா் மனிதவள முகமையின்கீழ் 132 போ் ஒப்பந்தத் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா். இவா்கள், தூய்மை, காவல், நோயாளிகளை அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
இவா்களுக்கு, அரசு அறிவித்த ஊதியம் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.707 வீதம் மாதத்துக்கு ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால், ஒப்பந்த நிறுவனமோ நாள் ஒன்றுக்கு ரூ.280 வீதம் மாதத்துக்கு ரூ.8 ஆயிரத்து 400 மட்டுமே வழங்குவதாகக் கூறப்படுகிறது.
எனவே, அரசு அறிவித்த ஊதியத்தை முழுமையமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஊழியா்கள் அண்மையில் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பேச்சுவாா்த்தை நடத்தியதில் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தொழிலாளா் துறை அலுவலா் முன்னிலையில் கடந்த 23 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. அறிவித்தபடி ஊதியத்தை முழுமையாக வழங்கக் கோரி ஊழியா்கள் பணியைப் புறக்கணித்து அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை அதிகாலை முதல் காலவரையற்ற உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.