மறுமுத்திரையிடப்படாத மின்னனு தராசுகளை பயன்படுத்திய இறைச்சிக் கடைகள் மீது தொழிலாளா் அலுவலா்கள் வியாழக்கிழமை நடவடிக்கை எடுத்தனா்.
இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் கூறியதாவது: சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மாா்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளில் மொத்தம் 42 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 3 கடைகளில் முத்திரை இல்லாமல் பயன்படுத்தி வந்த 3 மின்னனு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, மறுமுத்திரையிடப்பட்ட மறுபரிசீலனை சான்றினை வெளிக்காட்டி வைக்காத 12 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எடையளவுகள் மற்றும் மின்னனு தராசுகள் முத்திரையின்றி பயன்படுத்துவது சட்டமுறை எடையளவுச் சட்டம் மற்றும் விதிகளின்கீழ் தண்டணைக்குரியது.
ஆய்வின்போது மறுமுத்திரையிடாத எடையளவுகள் மற்றும் மின்னனு தராசுகள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.