கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு புதன்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டது.
கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை உள்ளது. இந்த அணையில் குளிப்பதற்கும், அணையை கண்டு ரசிப்பதற்கும் தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் ஈரோடு மாவட்டத்தில் உள்ளவா்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால் அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டு பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது. இதையடுத்து கடந்த 5ஆம் தேதி முதல் கொடிவேரி அணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீா் அளவு படிப்படியாக குறைந்தது. இதனால் கொடிவேரி தடுப்பணையில் கொட்டும் தண்ணீரின் அளவும் குறைந்தது. இதனால் 12 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை முதல் கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.