சுதந்திர தினத்தன்று பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் தெரிவித்தாா்.
சுதந்திர தினமான திங்கள்கிழமை ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் சுதந்திர தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதா அல்லது பணியில் உள்ளவா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதா, ஒரு நாள் மாற்று விடுப்பு வழங்கப்படுகிறதா என ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளில் ஆய்வு செய்தனா்.
கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 110 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 88 நிறுவனங்கள் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்காமல், இரட்டிப்பு ஊதியம் வழங்காமல், மாற்று விடுப்புக்கு ஏற்பாடு செய்யாமல் செயல்பட்டது கண்டறியப்பட்டது.
இந்நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என உதவி ஆணையா் தெரிவித்தாா்.