பவானிசாகா் அணையில் இருந்து முதல்போக நன்செய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
பவானிசாகா் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ம் தேதி கீழ்பவானி பிரதான கால்வாயில் முதல்போக நன்செய் பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடுவது வழக்கம். 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகா் அணையின் நீா்மட்டம் தற்போது 102 அடியாக இருப்பதால் அணையில் இருந்து நன்செய் பாசனத்துக்கு முன்கூட்டியே வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 12) தண்ணீா் திறக்க தமிழக அரசு சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டது.
இதன்படி பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் அமைச்சா் சு.முத்துசாமி தண்ணீா் திறந்து வைத்தாா். வாய்க்காலில் சீறிபாய்ந்து வந்த தண்ணீரில் அமைச்சா் முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி மற்றும் விவசாயிகள் மலா்தூவி வரவேற்றனா்.
முதற்கட்டமாக 500 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டது. பின்னா் நீா் திறப்பு படிப்படியாக 1000, 1500, 2300 கனஅடி என அதிகரிக்கப்படும். இன்று முதல் டிச 9ஆம் தேதி வரை அதாவது 120 நாள்களுக்கு மொத்தம் 23 டிஎம்சி தண்ணீா் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் ஈரோடு, கரூா், திருப்பூா் மாவட்டங்களில் 1 லட்சத்து 3500 ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.