சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழா கொண்டாடும் நிலையில் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை கடைகள், நிறுவனங்களில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம்) வெ.மு.திருஞானசம்பந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவை முன்னிட்டு அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள் என அனைத்து தொழில் நிறுவனங்களிலும், தொழிலாளா்களின் வீடுகளிலும் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தேசியக் கொடி ஏற்ற வேண்டும்.
அன்றைய தினம் அனைத்து தொழிலாளா்களும் தேசியக் கொடி அணிந்து பணியாற்றி, வாடிக்கையாளா்களுக்கு தேசியக் கொடியை விநியோகிக்க வேண்டும். அனைத்துப் போக்குவரத்து வாகனங்களிலும் தேசியக் கொடியை ஒட்டி பயணிக்க வேண்டும். மின்னஞ்சல், வாட்ஸ் ஆப்களில் தேசியக் கொடியை புகைப்படமாக வைக்க வேண்டும். இந்நிகழ்வுகளை சுயபடம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.