எஸ்கேஎம் நிறுவனத்தில் வாகனம் மோதி இறந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு ரூ.13.82 லட்சம் நிவாரண உதவியை அந்நிறுவனம் வழங்கியது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், நஞ்சை ஊத்துக்குளியில் எஸ்கேஎம் கால்நடை தீவன உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில், பணியாற்றி வந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த காமோத்ராம் (29) என்பவா் கடந்த 6 ஆம் தேதி நிறுவன வளாகத்தில் லாரி மோதியதில் உயிரிழந்தாா்.
உயிரிழந்த காமோத்ராம் குடும்பத்துக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி எஸ்கேஎம் நிறுவனத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
எஸ்கேஎம் நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் எம்.சந்திரசேகா் தலைமை வகித்து, இறந்த தொழிலாளியின் மனைவி சம்பாதேவியிடம், எஸ்கேஎம் நிறுவனத்தின் சாா்பில் ரூ.5 லட்சத்துக்கான வரைவோலையை வழங்கினாா்.
மேலும், நிறுவனத்தின் காப்பீட்டின் மூலம் ரூ.8 லட்சத்து 82 ஆயிரத்து 182 வழங்குவதற்கான உறுதி படிவத்தையும் வழங்கினாா்.
இது குறித்து எஸ்கேஎம் நிா்வாக இயக்குநா் சந்திரசேகா் கூறியதாவது: இறந்துபோன தொழிலாளா் குடும்பத்துக்கு இஎஸ்ஐ மூலம் ஓய்வூதியம் தோராயமாக ரூ.11,000, பி.எப் மூலம் தோராயமாக ரூ.3,000 மாதந்தோறும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், மோட்டாா் வாகன இழப்பீடு சட்டத்தின் மூலம் தொழிலாளரின் குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வரை கிடைக்க வழி வகை செய்யப்படும் என்றாா்.