ஈரோடு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் வகையறா கோயில்களான சின்ன மாரியம்மன் கோயில், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களின் குண்டம் மற்றும் தேர் திருவிழா கடந்த மார்ச் 15-ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது.
மார்ச் 19 ஆம் தேதி கம்பம் நடப்பட்டு 15 நாட்களாக மாநகரின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் கம்பத்திற்கு புனித நீர் ஊற்றி மாரியம்மனை வழிபாடு செய்து வந்தனர்.
இன்று அதன் முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்குதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா மாலை 3 மணிக்கு பெரிய மாரியம்மன் கோயிலில் முதலில் கம்பம் பிடுங்கப்பட்டு பன்னீர்செல்வம் பூங்கா சாலை வழியாக மணிக்கூண்டு சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து சின்ன மாரியம்மன் கோயில் மற்றும் காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களிலும் கம்பம் பிடுங்கப்பட்டு மணிக்கூண்டு பகுதியில் மூன்று கம்பங்களும் ஒன்று சேர்ந்து ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகளின் வழியாக காரைவாய்க்கால் சென்றடைந்தது.
வழி நெடுக சாலையின் இருபுறங்களிலும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கம்பத்திற்கு நீர் ஊற்றியும், உப்பு மிளகு வீசியும் வழிபட்டனர். பின்னர் மூன்று கம்பங்களும் காரைவாய்க்காலில் விடப்பட்டது.
மாநகரின் அனைத்து பகுதிகளும் கம்பம் பிடுங்கப்பட்டதில் இருந்து வாய்க்காலில் விடும் வரை குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் முதல் கொண்டு மஞ்சள் நீர் ஊற்றியும், மஞ்சள் பூசியும், மஞ்சள் நீர் விளையாட்டு விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினார். நாளை மறுதினம் காலை 10.30 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.