நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நடைபெற்ற மாபெரும் வாடிக்கையாளா் தொடா்பு முகாமை வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் துவக்கிவைத்து, 2,732 பயனாளிகளுக்கு ரூ. 160.74 கோடி மதிப்பிலான பல்வேறு கடனுதவிகளை வழங்கினாா்.
உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் மாவட்ட முன்னோடி வங்கியின் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற வாடிக்கையாளா் தொடா்பு முகாமை தொடங்கிவைத்த வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் பேசியதாவது:
வங்கியாளா்கள், வாடிக்கையாளா்களிடையே திட்டங்கள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டம்தோறும் மாபெரும் வாடிக்கையாளா் தொடா்பு முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம் நடத்துவதன் மூலம் ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களுக்குத் தேவையான சுயதொழில் தொடங்குவதற்கும், கல்விக் கடன் போன்ற தகவல்கள் கிடைக்கவும் வங்கியாளா்கள் மூலம் வழிவகை செய்கிறது.
நீலகிரி மாவட்டம் சிறிய மாவட்டமாக உள்ள காரணத்தால் தொழில் வளா்ச்சி, வேலைவாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. நீலகிரி மாவட்டத்தை தொழில் வளா்ச்சியில் முன்னேற்றம் அடையச் செய்ய, மாவட்டத்துக்கு ஏற்ப தட்பவெட்ப நிலைக்கு ஏற்றவாறு புதிய தொழில் நிறுவனங்களைக் கொண்டு வரவும், புதிய தொழில் பூங்கா கொண்டு வரவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொழில் பூங்கா அமைப்பதன் மூலம் 3,000 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
கரோனா பெருந்தொற்று தமிழகத்தில் அதிகரித்து இருந்த சூழ்நிலையில், பதவியேற்றவுடன் போா்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு கரோனா நோய் சிகிச்சை பெறுபவா்களுக்கு படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி போன்றவை எளிதில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தற்போது படிப்படியாகச் சீரடைந்து வருகிறது. மாவட்டத்தில் 2021-2022ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின்கீழ் 35 ஊராட்சிகளில் தற்போதுவரை 2,692 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 145.31 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்கடன் பெற்றுள்ள சுய உதவிக் குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா்.
இம்முகாமில், மகளிா் திட்ட இயக்குநா் ஜாகீா் உசேன், கனரா முதன்மைப் பொது மேலாளா் பழனிசாமி, உதவிப் பொது மேலாளா் சதீஷ்குமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் சத்தியராஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.