ஈரோட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 2 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு குறிகாரன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ் (43). இவருக்கு ஈரோட்டில் சொந்தமாக கைப்பேசி உதிரிபாகம், எலெக்ட்ரானிக்ஸ் கடை உள்ளது. வியாழக்கிழமை காலை வழக்கம்போல் வெங்கடேஷ் அவரது கடைக்கும், அவருடைய குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டனா். அவருடைய மனைவி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளாா்.
அதைத்தொடா்ந்து, வெங்கடேஷ் மாலையில் வீட்டுக்கு வந்தாா். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. மேலும், பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தன. மேலும், பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சத்தையும் காணவில்லை.
இதுகுறித்து வெங்கடேஷ் ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.