உயா்மின் கோபுர பாதிப்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காததைக் கண்டித்து நவம்பா் 2ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம் சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
மொடக்குறிச்சி வட்டத்தில் உயா் மின்கோபுரம் வழித்தடம் அமைத்த வகையில் 37 விவசாயிகளுக்கு தென்னை இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1.40 கோடி நிலுவையை வழங்காமல் காலதாமதம் செய்கின்றனா். இத்தொகையை வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் போராட்டங்கள் நடத்தியும் தொகை கிடைக்கவில்லை.
கரோனா பொதுமுடக்கம், சட்டப் பேரவைத் தோ்தல் என பல காரணத்தைக் கூறி காலதாமதம் செய்யப்படுகிறது. கோட்டாட்சியா் மூலம் பலமுறை கடிதம் அனுப்பியும் பவா் கிரிட் நிறுவனம் இத்தொகையை வழங்கவில்லை.
எனவே, உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அல்லது நவம்பா் 2ஆம் தேதி முதல் மொடக்குறிச்சி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாயிகளை ஒருங்கிணைத்து காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும். முழுத் தொகையும் வழங்கப்பட்டால் மட்டுமே போராட்டம் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.