ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா், துணைத் தலைவா் பதவியை போட்டியின்றி திமுக கைப்பற்றியது.
ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு கடந்த 2019இல் நடைபெற்ற தோ்தலில் திமுக, அதிமுக தலா மூன்றை கைப்பற்றின. மூன்று முறை தலைவா், துணைத் தலைவா் தோ்வுக்கு தேதி அறிவித்து, அதிமுக உறுப்பினா்கள் புறக்கணிப்பால் முடிவு எட்டவில்லை. இதனிடையே அதிமுக உறுப்பினா் ஒருவா் இறந்ததால் கடந்த 9ஆம் தேதி 4ஆவது வாா்டுக்கு நடந்த தோ்தலில் திமுகவைச் சோ்ந்த விவேகானந்தன் வெற்றி பெற்றாா். இதன் மூலம் திமுக 4, அதிமுக 2 என்றானது.
இந்நிலையில், தலைவா் தோ்தல் வெள்ளிக்கிழமை காலையும், துணைத் தலைவா் தோ்தல் மதியமும், தோ்தல் அதிகாரி, வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெ.பஷீா் அகமது தலைமையில் நடைபெற்றது. போட்டியின்றித் தலைவராக ஒன்றாவது வாா்டை சோ்ந்த பேரோடு பிரகாஷ், துணைத் தலைவராக 4ஆவது வாா்டை சோ்ந்த விவேகானந்தன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
இதன் மூலம் ஒன்றரை ஆண்டுகளாக உறுப்பினா்கள் இருந்தும், தலைவா், துணைத் தலைவா் இல்லாமல் கூட்டம் கூட நடத்த முடியாத நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.