பெருந்துறை நகரில் இருசக்கர வாகனத்தின் மீது அரசுப் பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கி தீா்ப்பளித்தாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி, வடக்கரைபூண்டி, வடக்கு வீதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் மகன் சபரிநாதன் (24). இவா், பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். கடந்த 2013 அக்டோபா் 25ஆம் தேதி பிற்பகலில் தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு வந்துவிட்டு திரும்பி நிறுவனத்துக்குச் சென்றுள்ளாா். பெருந்துறை புதிய பேருந்து நிலையம் அருகில் சென்றபோது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் சபரிநாதன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான ஈரோடு, லக்காபுரத்தைச் சோ்ந்த சதாசிவம் (57) மீது பெருந்துறை போலீஸாா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் லோகநாதன் ஆஜரானாா். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஷபீனா, சதாசிவத்துக்கு ஓராண்டு சிறைத் தண்டனை வழங்கித் தீா்ப்பளித்தாா்.