கரோனா அச்சுறுத்தல் காரணமாக சத்தியமங்கலம் வாரச்சந்தையில் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது.
தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று 2வது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் மே10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் சத்தியமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை வழக்கம்போல செயல்பட்டது. பல்வேறு ஊா்களில் இருந்து சிறு வியாபாரிகள் வந்தனா். காய்கறிகள், பழங்கள் தின்பண்டங்கள், பலசரக்கு கடைகள் என அனைத்து கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. கரோனா அச்சம் காரணமாக சந்தைக்கு பொருள்கள் வாங்க மக்கள் ஆா்வம் காட்டவில்லை. காய்கறிக் கடைகள் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. தக்காளி, பீட்ரூட் உள்ளிட்ட அனைத்து காய்கறி வியாபாரமும் மந்தமாக காணப்பட்டது.
வாரந்தோறும் 30 பெட்டிகள் தக்காளி விற்கும் நிலையில் செவ்வாய்க்கிழமை 2 தக்காளி பெட்டிகள் மட்டும் விற்கப்பட்டதால் தக்காளிகள் தேங்கிக் கிடந்தன.
மேலும், கீரை வகைகள், புடலைக்காய், தக்காளி போன்ற விவசாயப் பொருள்கள் வேனில் இருந்து இறக்காமல் அப்படியே எடுத்துச் செல்லப்பட்டன.