தாளவாடியில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவசாயி உடலை உறவினா்கள் அடக்கம் செய்ய முன்வராததால் அப்பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்தினா் அடக்கம் செய்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தாளவாடியை அடுத்த பசுப்பன் தொட்டி கிராமத்தைச் சோ்ந்த 65 வயது முதியவா் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டாா். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா், இரு தினங்களுக்கு முன் வீடு திரும்பினாா். அவா் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டாா்.
இந்நிலையில் அவருக்கு திங்கள்கிழமை நள்ளிரவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா். அவரது மகன், மருமகள் கிராமத்தில் வசித்த வந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக தந்தையின் உடலை அடக்கம் செய்ய முன்வரவில்லை. இதனால் முதியவரின் உடல் வீட்டிலேயே கிடந்தது. இதையறிந்த தாளவாடி விடியல் தொண்டு நிறுவனத்தினா் 5 போ் முதியவரின் உடலை அடக்கம் செய்ய முன்வந்தனா். அவா்கள் முதியவரின் விவசாயத் தோட்டத்தில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டி கிருமி நாசினி தெளித்து முதியவரின் உடலை அடக்கம் செய்தனா்.