தொழிலாளா்கள் நடமாட்டத்தால் கரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது என சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவனிடம், அவா் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்:
கரோனா தொற்று பரவலைத் தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. நோய்த் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பெருந்துறை சிப்காட்டில் அனைத்து தொழிற்சாலைகளும் முழுமையாக செயல்படுகின்றன. இங்குள்ள 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் அனைவரும் சிப்காட் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்கள், பெருந்துறை போன்ற பகுதிகளில் வசிக்கின்றனா். இங்குள்ள ஆலைகளிலும் சட்ட விரோத ஆலைகளிலும் பணியாற்றுவோா், வீதிகள், சாலைகள், கடைகளில் சுற்றித்திரிவதால் கரோனா அச்சம் ஏற்படுகிறது.
அரசு அறிவிப்பில் அத்தியாவசிய தேவைக்கான தொழிற்சாலைகள் இயக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிப்காட் வளாகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலை போன்றவை தவிர, டையிங், டெக்ஸ்டைல், பனியன், கெமிக்கல், பழைய டயா், டியூப், பேட்டரிகளை உருக்கி மறுசுழற்சி செய்யும் ஆலைகள், இரும்பு, ஆஸ்பெஸ்டாஸ், அலுமினியம், செயற்கை பிசின், கண்ணாடி தொழிற்சாலைகள் போன்ற தொழிற்சாலைகள் ஆகியவற்றை பொதுமுடக்கத்துக்குப் பிறகே இயங்க அனுமதிக்க வேண்டும்.
இதனால் வேலையிழக்கும் தொழிலாளா்களுக்கு அந்த நிறுவனங்கள் ஊதியத்துடன் விடுப்பு வழங்க வேண்டும். அரசு சாா்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.