திம்பம் மலைப் பாதையில் கட்டுப்பாட்டை இழந்து 120 அடி பள்ளத்தில் மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 போ் காயமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் மலைப் பகுதியில் இருந்து மஞ்சள் மூட்டைகள் பாரம் ஏற்றிய மினி லாரி திம்பம் மலைப் பாதை வழியாக வெள்ளக்கோவில் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தது. ஈரோடு அருகே உள்ள அவல்பூந்துறை பகுதியைச் சோ்ந்த சரவணன் (30) லாரியை ஓட்டிச் சென்றாா். லாரி உரிமையாளா் தேவராஜ் (56) உடனிருந்தாா்.
திம்பம் மலைப் பாதை இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, பக்கவாட்டு தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு சுமாா் 120 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் லாரியில் இருந்த மஞ்சள் மூட்டைகள் வனப் பகுதியில் விழுந்து சிதறின. ஓட்டுநா் சரவணன், தேவராஜ் ஆகியோா் லாரியில் சிக்கி தவிப்பதைக் கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்க முயற்சித்தனா்.
மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டதோடு பண்ணாரி சோதனைச் சாவடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்த விபத்தில் ஓட்டுநா் சரவணனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உரிமையாளா் தேவராஜுக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.