அமைப்புசாரா தொழிலாளா்கள் 4,418 பேருக்கு ரூ. 1.02 கோடி நிதி உதவிகளை வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வழங்கினாா்.
தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறையின் சாா்பில், ஈரோடு மாவட்டத்தில் பதிவு பெற்ற 1,000 அமைப்புசாரா தொழிலாளா்களுக்குப் பல்வேறு உதவித் தொகைகள், 3,418 பேருக்கு நிலுவை ஓய்வூதியம் என மொத்தம் 4,418 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ரூ. 1,02,60,250 மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சா் சு.முத்துசாமி நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். முன்னதாக அமைச்சா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில், விகாட் தொழில் நிறுவன சமூகப் பங்களிப்பு நிதியில் இருந்து 1,000 பேருக்கு இலவச தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்தாா்.
இதில், அந்தியூா் எம்.எல்.ஏ. ஏ.ஜி.வெங்கடாசலம், மாவட்ட வருவாய் அலுவலா் பி.முருகேசன், தொழிலாளா் உதவி ஆணையா்கள் மு.கண்ணையன், சு.காயத்ரி, த.முருகேசன், த.பாலதண்டாயுதம், விகாட் பொது மேலாளா் வி.சிவகுமாா், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.