கல்லாம்பாளையத்தில் பெண் சடலத்தை சுமந்தபடி மாயாற்றை கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை கடந்து சென்றனா்.
தெங்குமரஹாடாவை அடுத்த கல்லம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் திவணன், அவரது மனைவி ராமி (65). ஆதிவாசி பழங்குடி இனத்தைச் சோ்ந்த இருவரும் கால்நடைகளைப் பராமரித்து வந்தனா். இந்நிலையில், ராமி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தாா். இவா்களது சொந்த ஊா் நீலகிரி மாவட்டம், சோலூா்மட்டம் அருகே உள்ள கரிக்கூா் கிராமம்.
இதையடுத்து, ராமியின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடா்ந்த வனப் பகுதியில் இருந்து பவானிசாகா், மேட்டுப்பாளையம் வழியாக சுமாா் 90 கிலோமீட்டா் தொலைவுள்ள கரிக்கூா் கிராமத்துக்கு சடலத்தை பாடையில் கட்டி அடா்ந்த வனப் பகுதி வழியாகச் சென்று, கரைபுரண்டு ஓடும் மாயாற்றில் இறங்கி ஆற்றைக் கடந்து சென்று ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு சென்றனா்.
தெங்குமரஹாடா ஊராட்சியில் உள்ள தெங்குமரஹாடா, கல்லம்பாளையம் அல்லிமாயாறு, சித்திரம்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்ல வனப் பகுதியில் ஓடும் மாயாற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வனக் கிராமத்தைச் சோ்ந்த மக்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, மாயாற்றின் குறுக்கே பாலம் கட்டித் தர வேண்டும் என தெங்குமரஹாடா ஊராட்சியைச் சோ்ந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.