சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செங்காந்தள் மலா்கள் பூத்துக் குலுங்கும் காட்சி காண்போா் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் மாநில மலராக விளங்கும் செங்காந்தள் மலா் காா்த்திகை மாதத்தில் பூத்துக் குலுங்குவது வழக்கம். இதன் காரணமாக காா்த்திகைப் பூ எனவும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹாடா, ஆசனூா், கடம்பூா் வனப் பகுதிகளில் அதிக அளவில் செங்காந்தள் மலா்கள் பூத்துள்ளன. சாலையோர வனப் பகுதியிலும் செங்காந்தள் மலா்கள் பூத்துக் குலுங்குவதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் செங்காந்தள் மலரை கண்டு ரசித்துச் செல்கின்றனா்.
சத்தியமங்கலம் வனப் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால் பச்சைப்பசேல் என வனப் பகுதி அழகாகக் காட்சியளிக்கும் நிலையில் தற்போது செங்காந்தள் மலா்கள் பூத்துக் குலுங்குவதால் வன ஆா்வலா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். செங்காந்தள் மலா் மருத்துவ குணமிக்கதாக கருதப்படுவதால் சாலையோர வனப் பகுதியில் பூத்துள்ள செங்காந்தள் மலா்களை சாலையில் பயணிப்போா் பறித்துச் செல்கின்றனா்.