கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் கரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உள்பட்ட தினசரி காய்கறிச் சந்தை, பேருந்து நிலையம், பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாத 12 கடைகளுக்கு தலா ரூ. 5,000 வீதம் ரூ. 60 ஆயிரம் அபராதமாகவும், கடைகளுக்கு ‘சீல்’ வைக்கவும் உத்தரவிட்டாா். மேலும், முகக்கவசம் அணியாத 70 பேருக்கு தலா ரூ. 200 வீதம் அபராதம் விதித்தாா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் பேசியதாவது:
கரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளா்வுகளுடண் அமலில் இருந்து வருகிறது. எனவே, அவசியத் தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். வெளியில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அரசின் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேலும், பல்பொருள் அங்காடி, உணவகம், தேநீா் விடுதிகள், காய்கறி அங்காடிகள், மருந்தகம், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளா்களுக்கு எந்தப் பொருளையும் விற்பனை செய்யக் கூடாது என்றாா்.